மீண்டும் அவளோடு 4

Posted on

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

நான் நினைத்து வந்தது இத்தனை வருடங்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்த ‘கோமதி’ என்ற பெயரை கேட்டதுமே மனத்திற்கு தன்னையும் அறியாமல் ஒரு பரவசம், மகிழ்ச்சி எல்லாம் அந்த ஒற்றை வினாடிக்குள் வந்து சென்றதே.

இதையெல்லாம் நமக்குள் ஏற்படுத்திய அந்த பெண்மணியின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தான் இந்த பிளாட்டிற்கு வந்தோம்.. ஆனால் இங்கு முப்பது வருடங்களுக்கு முன் காதல் என்ற ஒளியை என் வாழ்வில் ஏற்றிய ஒளி விளக்கை நான் இத்தனை வருடங்களுக்கு பிறகு காண்பேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை.

நான் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் எந்த அசைவும் இல்லாமல் ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் கையில் அந்த பார்சலை வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தேன். எனக்கு எதிரே நெருங்கி நிற்கும் கோமதியின் முகத்திலும் எள் ஆடவில்லை.

என்னை பார்த்து அவளுக்கு மகிழ்ச்சியா? இல்லை அதிர்ச்சியா? என தெரியவில்லை. அவளின் மனதில் எதுவாக இருந்தாலும் அந்த உணர்ச்சியை முகத்தில் முழுமையாக காட்டாமல் ஒரு வித அதிர்ச்சி கலந்த பயத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்.

எங்கள் இருவருக்கும் இடையே எந்த வித பேச்சும் நடைபெறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சில வினாடிகள் பார்வையால் மட்டும் பார்த்துக் கொள்கிறோம். உள்ளிருந்து அவளின் மகளின் சத்தம் கேட்டதும் தான் இருவருமே கொஞ்சம் சுயநினைவுக்கு வந்தோம். அதிர்ச்சியிலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு முன்னால் கோமதியின் மகள் எங்களை நோக்கி கதவருகே வந்து,

“நீங்க யாரு ?என்ன பார்சல் இது?” கேட்க,

“இல்ல.. அபார்மெண்ட் வாட்ச்மேன் தான் இந்த பார்சலை இந்த பிளாட்டுல குடுக்க சொன்னான். பார்சல் இருந்த நம்பருக்கு கால் பண்ணியிருக்கான். ஸ்விச் ஆப் வந்தது.. நந்தனா.. இந்த பிளாட் தான..” பதற்றத்துடனே கேட்க

“என் சிஸ்ட்ர் தான்..” சொல்லிவிட்டு சந்தேகத்துடன் மேலும் கீழும் பார்க்க.. பின்,

“ஒன் மினிட்” சொல்லிவிட்டு கால் பண்ணி கேட்டு சில வினாடிகளிலே பார்சலை புக் பண்ணியதை கன்பார்ம் செய்துவிட்டு அவள் அம்மாவிடம் பார்சலை வாங்கிக் கொண்டு உள்ளே வர சொன்னாள். ஆனால் கோமதியோ என்னை பார்த்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளாமல் அப்படியே நிற்க.

நானும் பார்சலை என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் குழப்பத்துடனே கூட நிற்க நந்திதா அவள் அம்மா நிற்பதை பார்த்து விட்டு வந்து அவளின் தோளில் தட்ட பின் முழுமையாக சுயநினைவுக்கு வந்தாலும் நந்திதா திட்டிக் கொண்டே

“ம்மா பார்ச்சலை வாங்க சொல்லிட்டேன். நீ என்னம்மா பார்சல் வாங்காம எதையோ திங் பண்ணிட்டு இருக்க.. பாரு. அங்கிள் எவ்வளவு நேரம் கையில வச்சிட்டு நிக்கிறார்.. சாரி அங்கிள்.. நீங்க குடுங்க அங்கிள்..” என என் கையில் இருந்த பார்சலை தன் கையில் வாங்கி கொண்டு உள்ளே சென்றாள்.

இனியும் அங்கே நின்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது என நினைத்து நானாகவே அந்த இடத்தை விட்டு நகர விருப்பம் இல்லையென்றாலும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மனமில்லாமல் அங்கிருந்து என் பிளாட்டிற்கு வந்து படுக்கையில் படுத்தேன்.

என்னுடைய நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. கோமதியுடனான காதல் நினைவுகள் ஒவ்வொன்றும் காட்சியாக கண் முன்னால் ஃபோட்டா பிலிமில் பார்ப்பது போன்ற பிரம்மை. அது பிரம்மை இருந்தாலும் எல்லாம் இனிமையாக நினைவுகளாக இருந்ததால் கொஞ்சம் இனிமையாக இருந்தது.

ஆனால் அவள் என்னை விட்டு பிரிந்த சென்ற தருணத்தை மீண்டும் நினைத்தும் இதயத்தில் மீண்டும் வலி.. ஐந்து ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் அழகாக காதலித்துக் கொண்டிருந்தோம்.

அந்த அழகான காதலில் யார் கண்பட்டதோ தெரியவில்லை ஒருநாள் இரவோடு இரவாக அவளின் குடும்பம் வீட்டை காலி செய்து கொண்டு வேறொரு ஊருக்கு சென்றுவிட்டனர். இருந்தாலும் கோமதி ஏதாவது ஒருவகையில் என்னை தொடர்பு கொள்வாள் என்ற நம்பிக்கையோடு அவளின் செய்திக்காக காத்திருந்தேன்.

நாட்கள் சென்றுக் கொண்டேயிருந்ததை தவிர அவளிடமிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. கிட்டதட்ட ஒரு வருடமாக அவளை பற்றியும் அவளின் குடும்பத்தை பற்றியும் ஊரில் இருக்கும் எவரும் எந்த சரியான தகவலும் கிடைக்காததால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

ஒரு வருடத்திற்கு பிறகு அவளின் அண்ணனை ஊர்க்காரர் யாரோ சிலர் பார்த்து பேசியதாக தகவல் அடிபட்டது. கோமதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

அவள் பிரிந்த சென்றதை விட எனக்கு இது மிகவும் மனதை பாதித்தது. அந்த துயரத்தில் இருந்து மீள நாட்கள் இல்லை இல்லை மாதக் கணக்கில் ஆனது. வீட்டிலிருந்த எல்லோரும் ஏதோ ஏதோ அவர்களுக்கு தெரிந்த அறிவுரையை கதையாக கொட்டி தீர்த்தனர்.

அந்த சமயத்தில் தான் ராணுவத்தில் ஆள் எடுப்பதாக பேச்சு அடிப்பட்டு தகவல் கிடைக்க என்னை அதற்கு விண்ணபிக்க சொல்லி கட்டாயபடுத்த நானும் வேறு வழியில்லாமல் கடனே என்று விண்ணபிக்க அதில் என் படிப்பும் தகுதிக்கும் ஏற்ற வகையில் பணி கிடைத்தது.

எனக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டதால் அந்த பணியை ஏற்றுக் கொண்டு கோமதியின் பற்றிய எண்ணங்களுடனே பணியையும் தொடங்கினேன்.. நாட்கள் செல்ல செல்ல அங்கிருந்த வேலைப்பளுவில் கோமதி பற்றிய எண்ணங்கள், நினைவுகள் எல்லாம் மனதில் அதிகம் தோன்றுவதில்லை. காலப்போக்கில் அவளுடான காதல் நினைவுகள் சுவடுகளாகவே போய்விட்டன.

அதன் பின் என்னுடைய வாழ்க்கையிலும் நிறைய நிறைய மாற்றங்கள் பணி சம்மந்தமாகவும், குடும்ப வாழ்க்கையிலும் அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டே இருந்தது.

இந்த காலத்தின் வேகத்தில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன். ஒரு இரவில் கண்ணை மூடி படுத்து பகலில் முடித்தது போல் இருக்கிறது. ஆனால் இருப்பத்தைந்து ஆண்டுகள் மேல் வெகு இலகுவாக சென்றுவிட்டது.

இத்தனை ஆண்டுகளுக்கு பின் என்னுடைய வாழ்க்கையின் வாழ்நாட்களை கழிக்க வந்த இடத்தில் மீண்டும் அவளை சந்திப்பேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. அவளை பார்த்தது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னை தனியாக தவிக்க விட்டு சென்று ஏற்படுத்திய காயத்தை நானே கிளறி விட்டுக் கொண்டேனோ என்ற எண்ணமும் மனதில் எழ தவறவில்லை.

கோமதியை மீண்டும் சந்தித்தது என் வாழ்வின் வரமா? சாபமா? என தெரியாமல் குழப்பத்தில் தூக்கம் பிடிக்காமல் தனியாக புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். முந்தைய நாள் மாதிரியே எப்போதும் கண்ணை மூடினேன் என்று தெரியாமலே இப்போதும் கண்ணை மூடியிருக்கிறேன் என்பதே நடு இரவில் முழிப்பு வர தெரிந்தது.

கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்தும்…

நானும் அந்த முகத்தை பார்த்தும் சந்தோஷபடுவதா இல்லை அவரை விட்டு பிரிவதற்கு நானே ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறேன் என நினைத்து வருத்தபடுவதா என தெரியாமல் அமைதியாக சோபாவில் உட்காந்திருந்தேன். ஆனால் அவரை விட்டு பிரிந்து வந்த நாட்களில் அவரை எப்படியாவது ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிய நாட்கள் பல உண்டு.

அந்த ஏக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே என்னுடைய திருமணத்தை என் சம்மதமில்லாமல் பேசி முடித்து பதினைந்து நாட்களுக்குள்ளாகவே திருமணமும் முடிந்துவிட்டது. அதன் பின் அவரை சந்திக்கவே முடியாது என தெரிந்துவிட்டது. ஆனால் அவரின் நல்ல மனதுக்கு எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என அவரை பற்றி நினைக்கும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்..

இத்தனை வருடங்கள் கழித்து என்னுடைய ஆருயிர் காதலனை மீண்டும் என்னுடைய வீட்டு வாசலில் வைத்து சந்திப்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் இப்போது அது நடந்துவிட்டது. நடந்தது கனவா? இல்லை நிஜமா? என்ற சிறுகுழப்பம் கூட இருந்தது.

என் எதிரே இருந்த டேபிளில் இருக்கும் பார்சல் இது கனவில்லை என்பதை உறுதிபடுத்துவிட்டது. இந்த சந்திப்பு எதனால் நிகழ்ந்தது என தெரியாது. காலத்தின் ஜாலத்தால் நிகழ வேண்டும் என இருந்திருக்கிறது. நிகழ்ந்திருக்கிறது.

இந்த சந்திப்பால் என்னுடைய வாழ்வில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வமும் கூடவே சிறுபயமும் இருந்தது. எனக்கு ஏற்பட்ட சிறு பயத்தால் முகம் வியர்த்து வடிய அந்த சமயம் பார்த்து நந்திதா அவளுடைய ரூமில் இருந்து வெளியே வந்து நான் உட்காந்திருக்கும் நிலையை பார்த்து விட்டு என் பக்கத்தில் வந்து

“மம்மி, என்ன ஆச்சு. ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க” கேட்க என்னை நானே சுதாரித்து கொண்டு

“அதலாம் ஒன்னுமில்ல.. பங்சன்ல சாப்பிட்டது தான் ஒரு மாதிரியா இருக்கு..”

“ஃபுட் பாய்சனா மம்மி.. வரியா டாக்டர்ட்ட போலாம்..”

“இல்ல அதலாம் வேணாம்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த சரியா ஆகிடும்..”

“சரி மம்மி நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் ஆபிஸ் ஓர்க் பெண்டிங் இருக்கு. அத போய் நா பாக்குறேன்” சொல்லி சோபாவில் உட்கார்ந்தவள் எழுந்து அவள் ரூமை நோக்கி சென்றாள்.. அவள் எழுந்து போனதும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

என் உடம்பில் வழியும் வியர்வை நிறுத்த எழுந்து ஃபேனை போட்டு மீண்டும் சோபாவில் உட்காந்திருந்தேன். பேனில் இருந்த குளிர்ந்த காற்று பட்டதும் உடலும் மனதும் கொஞ்சம் ஆசுவாசபட்டிருந்தது. அப்படியே சோபாவில் சாய்ந்து கண்ணை மூடிய படி அவரை சந்தித்த முதல் தருணத்தில் இருந்து பிரிவதற்கான முந்தைய நாட்கள் வரை இருந்ததை அசைபோட அவையெல்லாம் என் முன்னால் இப்போதும் நடப்பது போன்ற பிரம்மை.

அது பிரம்மையாக இருந்தாலும் அந்த ஐந்து ஆண்டு கால கட்டத்தில் பல தருணங்களில் என்னை பெண்ணாக பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படி உணருவதற்கும், உணர்த்தியதற்கும் அவர் மட்டும் தான் காரணம். இவ்வளவு சந்தோஷத்தை தந்த அவருக்கு எந்த ஒரு சந்தோஷத்தையும் நான் தந்ததில்லை.

மாறாக எப்போதும் இருக்க கூடிய வலியை மட்டும் குடுத்திருக்கிறேன். காதலிக்கும் கட்டத்தில் அதிகபட்சமா அவரின் உதட்டில் முத்தமிட்டு இருக்கிறேன். அதை தவிர வேற எதையும் பெரிதாக செய்ததில்லை.

என்னை பார்த்ததும் அவரின் மன எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும் என நினைத்து பார்த்தேன். என்னை பார்த்ததும் கண்டிப்பாக நான் ஏற்படுத்தி சென்ற வலிகளை திரும்பி நியாபகத்திற்கு வந்து மீண்டும் வலியை ஏற்படுத்தியிருக்கும் என நன்றாக தெரியும்.

இனி வரும் சந்திப்பு அந்த காயத்திற்கு மருந்தாக இருக்குமா? இல்லையா? என்றெல்லாம் தெரியாது. ஏன் மீண்டும் சந்திப்போமா? இல்லையா? கூட தெரியாது. எல்லாம் காலத்தின் கையில் தான் இருக்கிறது. காலம் இதற்க்கெல்லாம் வழிவகை ஏற்படுத்தி கொடுக்குமா? தெரியவில்லை. பொறுத்திருந்தால் பார்த்தால் தான் தெரியும்.. காலம் செய்யும் ஜாலம் என்னவென்று?

திடீரென்று என் மனதில் ஏன் இது மாதிரியான எண்ணங்கள் தோன்றுகின்றன என எனக்கே தெரியவில்லை. ஒருவேளை அவரை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தால் ஏற்படுகிறதோ?. ம்ம் அப்படி கூட இருக்கலாம்.. இந்த காலம் மனிதர்களிடம் எப்படியெல்லாம் தன் ஜாலத்தை காட்டி திக்கு முக்காட வைக்கிறது என நினைக்கும் போதே வியப்பாக தான் இருக்கிறது.

அந்த வியப்புடனே உட்கார்ந்திருக்க சிறிது நேரத்தில் மீண்டும் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் மீண்டும் ஒரு படபடப்பு வந்து தொற்றிக் கொண்டது. இரண்டாவது முறையும் அடிக்க கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு போய் கதவை திறக்க என் மகள் நந்தனா தான் நின்றுக் கொண்டிருந்தாள். அவள் தான் என தெரிந்ததும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவள் உள்ளே வந்து பார்சலை பார்த்துவிட்டு,

“வாவ்.. ஆடர் பண்ணது வந்திருச்சா?” சொல்லிக் கொண்டே அந்த பார்சலை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த சமயம் தன் அலுவலக வேலையை முடித்துவிட்டு வந்த நந்திதா

“ஏன்டி ஆடர் பண்ணினா எங்ககிட்ட கொஞ்சம் சொல்லலாம்ல..”

“இல்ல சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் நெனச்ச..”

“நல்லா நெனச்ச போ..” நாங்க பங்சன் முடிச்சிட்டு வந்த கொஞ்ச நேரத்துல ஒரு ஆள் வாட்டசாட்டமா இந்த பார்சலை வச்சிட்டு நிக்குறார். மம்மி அந்த ஆள பாத்ததுமே டம்மி ஆகிடுச்சு சொல்லி சிரிக்க எனக்கும் அந்த சிரிப்பை பார்த்ததும் கொஞ்சம் மனநிம்மதியாக இருந்தது.

“உன் ஃபோன் என்ன ஆச்சு.? ஸ்விட்ஆப்ல இருக்கு.”

“ஆமா.. டுடே சார்ஜ் போடல..”

“ம்ம். பட் உனக்கு லக்கி டே தான். ஆள் இல்லனாலும் பார்சல் வாட்ச்மேன் வாங்கி வச்சிருக்கான். அவன் அந்த வாட்டசாட்டமான ஆள்ட்ட குடுத்து குடுக்க சொல்லியிருக்கான். இவரும் வந்து குடுத்துருக்கார்” சொல்லி பேசிக் கொண்டிருக்க எனக்குள் வந்த நிம்மதி மீண்டும் காணாமல் போனது.

இதுவரை எத்தனையோ நபர்கள் வந்து இது மாதிரி குடுத்திருக்கிறார்கள். அப்போது எல்லாம் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏதோ நடப்பது போல் தோன்றுகிறது. அது ஏன்? என யோசித்துக் கொண்டிருக்க,

“மம்மி, பசிக்குது.. தோச ஊத்திறியா?” என் மகள் நந்தனா கேட்க என் சிந்தனையை ஒதுக்கி எல்லாம் வைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றேன்..

மீண்டும் அவர்களோடு வருவேன்…

384381cookie-checkமீண்டும் அவளோடு 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *