மீண்டும் அவளோடு 5

Posted on

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

தொடர்ந்து கோமதியின் பார்வையிலிருந்து…

கிச்சனில் அடுப்பை பற்ற வைத்து தோசை கல் காய்ந்ததும் மாவை ஊற்றியதும் ஒதுக்கி வைத்த அவரின் நினைவுகள் மீண்டும் எனக்குள் வந்து ஆட்சி செய்ய தொடங்கியது. அது எதனால் என்று புரியாமல் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

அந்த யோசனையிலே ஊற்றிய தோசையை கவனிக்காததால் அது கருகி வாசம் வர என்னுடைய குழந்தைகள் இரண்டும் இருந்த இடத்திலிருந்து கத்த சுயநினைவு வந்து கல்லை பார்க்க தோசை முற்றிலும் கருப்பாக மாறி இருந்தது. அதை எடுத்து தனியாக வைத்து விட்டு மீண்டும் அவளுக்கு தேவையான தோசையை நன்றாக ஊற்றி சாப்பிட குடுத்துவிட்டு ரூமிற்குள் படுக்க வந்துவிட்டேன்.

படுத்ததும் தூக்கம் வராமல் அவரின் நினைவுடனே புரண்டு கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த சந்திப்பு எதனால் நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பினால் வாழ்க்கை எதுவும் திசை மாறுமா? என எனக்குள் ஏற்கெனவே எழுந்த சந்தேங்கள் மீண்டும் மீண்டும் கேள்விகளாக எழுத்துக் கொண்டே இருந்தன.

என் பெண்களுக்காக இந்த மாதிரியான கேள்விகள் எழுந்தாலும் என்னை ஒரு பெண்ணாக உணரும் தருணத்தில் மீண்டும் அவரை சந்திப்போமா சந்திக்க முடியுமா என்ற ஆசையும் மனதுக்குள் இருக்க தான் செய்தது. மனதினுள் ஆசைகள் ஆயிரம் வரும்.

அதலாம் நிறைவேறி விடுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் காலத்திடம் ஒப்படைத்துவிட்டு பின் அந்த நினைவுகள் மறக்க முயற்சி செய்துக் கொண்டே கண்ணையும் மூடினேன்.

வெங்கடேசன் பார்வையிலிருந்து…

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போது உடலும் மனமும் மிகவும் உற்சாகமாக இருந்தது. அதற்கு காரணம் ஆருயிர் காதலி கோமதியை சந்தித்தது தான். ஆனால் இன்று அவளை பார்ப்பேனா என்ற ஏக்கம் அதுவாகவே வந்து தொற்றிக் கொண்டது. அப்படி பார்த்தால் பேசுவாளா?

இல்லை குடும்பம் இருப்பதால் பேசாமல் இருந்துவிடுவாளா என்ற பயம் கூடவே இருந்தது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும் நன்மைக்கே என்று சற்று அமைதியாக இருந்தேன். படுக்கை விட்டு எழுந்து காலை கடன்களை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன்.

மார்கழி மாத குளிர்ந்த காற்று உடலில் மேல் பட்டதும் ஒரு பரவசம் உணர்வு உடல் முழுவதும் பரவி புது புத்துணர்ச்சி தந்தது. அந்த விடியற்காலையில் ஆட்கள் யாரும் அதிகமாக இல்லை. அதனால் அமைதியாக இருந்தது. அந்த சூழல் மனதிற்கும் கொஞ்சம் நிம்மதியை தந்தது.

பின் அபார்மெண்டை விட்டு வெளியே வந்து டீ கடையை நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் நடந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் டீக்கடை இல்லை என்பது தெரிய வந்தது. அபார்மெண்டிற்கு வரும் வழியில் இருந்த சிறிய பெட்டிக்கடையில் அன்றைகான தி இந்து பேப்பரை மட்டும் வாங்கிக் கொண்டு பிளாட்டிற்கு வந்தேன்.

பிளாட்டினுள் நுழைந்ததும் இதுவரை இல்லாமல் இருந்த கோமதி நினைப்பு மீண்டும் வந்துவிட்டது. ஒருவேளை என்னுடைய பிளாக்கிக்கிற்குள்ளே இருப்பதால் என்னவோ அடிக்கடி அவளை பார்க்கும் எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

அந்த நினைவுடனே அன்றைய நாளிதழை புரட்டி பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின் சப்பாத்திக்கு தேவையான மாவை பிசைந்து வைத்து விட்டு செய்திகள் கேட்க டிவியை போட்டு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன தான் மனதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து அடுத்தடுத்த வேலைகளில் என்னை ஈடுப்படுத்திக் கொண்டாலும் மனம் ஒரு குரங்கு என்பதை நிருபித்து விடுகிறது. கோமதி பற்றிய நினைவுகள், எண்ணங்கள் மனதினுள் தோன்றிக் கொண்டே இருந்தன.

அது ஏன் அவளின் மீதிருந்த காதலா? அந்த காதல் தான் சேரவில்லையே. அந்த காதலால் மகிழ்ச்சியை விட வலி தான் ஏற்பட்டது. இருந்தும் ஏன் அவளை பற்றிய எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஒருவேளை எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதா? என்ற கேள்வியும் மனதில் எழாமல் இல்லை.

பின் குளித்துவிட்டு வந்து பிசைந்து வைத்த மாவை உருட்டி நான்கு சப்பாத்திகள் போட்டு சாப்பிட்டேன். இந்த இரு வேலைகளுக்கும் இடையில் அவளின் நினைவுகள் வந்து என்னையும் மனதையும் குழப்பாமல் இல்லை.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முடிவு செய்தேன். இப்போதே கிழம்பலாமா என மணியை பார்த்தேன். 8.30தான் ஆகியிருந்தது. அவள் வீட்டில் கணவர், குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள்.

தேவையில்லாத சந்தேகங்கள், அதனால் பிரச்சனைகள் கூட வரலாம் எண்ணி ஒருமணி நேரத்திற்கு பின் போய் பார்க்கலாம் என முடிவு செய்து மனதை அமைதியாக கட்டுபடுத்திக் கொண்டேன்.

ஆனாலும் அந்த ஒருமணி நேரத்திற்கான ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகவே தெரிந்தது. எப்போது தான் அந்த ஒரு மணிநேரம் முடியும் என்றிருந்தது. நேரத்தை பார்க்கும் போதெல்லாம் வெகு சில நிமிடங்களே கடந்திருக்கும். நேரம் எப்போது செல்ல வேண்டும் நினைக்கிறமோ அப்போது எல்லாம் செல்லாது.

எப்போது வேகமாக செல்லகூடாது என நினைக்கிறோமோ அந்த நொடியிலிருந்து வேகமாக சென்று வேகமாகவே முடிந்துவிடும். எப்போதும் காலமும், நேரமும் நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு முரணாக தான் நடந்துக் கொள்கின்றன. இப்படி பல எண்ணங்கள் ஓட்டங்கள் மனதில் நிகழ்ந்துக் கொண்டே இருந்தன. இப்போது மணியை பார்க்கும் போது ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தன..

இது தான் சரியான நேரம் என நினைத்து அவளின் பிளாட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தேன்.. காலிங் பெல் அடித்தும் வீட்டின் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை ஆள் இல்லையா? என்று கூட தோன்றியது. மீண்டும் ஒரு முறை காலிங் பெல்லை அடித்து பார்ப்போம்.

எந்த பதிலும் உள்ளே இருந்து வரவில்லை என்றால் கிளம்பிவிடலாம் என நினைத்து காலிங் பெல்லை அடிக்க இந்த முறை, “யாரு.? கொஞ்சம் இருங்க வரேன்” என்று பதில் உள்ளே இருந்து வர, “அப்பாடா உள்ளே தான் இருக்கிறாள்” என தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே இருந்து வந்து கதவை திறந்தாள். தலையில் சுற்றிய ஈரத்துண்டோடு வந்து அவள் கதவை திறந்ததும் அந்த அழகில் அப்படியே மெய்மறந்து அவளை பார்த்துக் கொண்டே நின்றுவிட்டேன். இத்தனை வருடங்கள் கடந்தும் அவளின் அழகு எதுவும் மாறவில்லை.

தலையில் இருந்து முகத்தில் இருந்த முடியில் இருந்த நீர் வடிந்து முனையில் ஒரு வினாடி நின்று பின் கையில் விழ ஏதோ மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. ஆனால் இது சுகமான மின்சாரம்.

அவளின் உடம்பில் இருந்து வழிந்து வந்து கையில் விழுந்த நீர்த்துளி கூட அவளின் மணத்தை காட்டுகிறது. ஓ. இது தான் ஒவ்வொரு பெண்ணின் மணத்தை பற்றி ஆண்கள் அறியாத ரகசியமோ மகத்துவமோ? இது மாதிரியான மின்சார தாக்குதல் அடுத்து எப்போது நிகழுமோ என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

இது மாதிரியான சுக நினைவுக்குள் மூழ்கியிருக்க நானிருக்கும் நிலையை உணர்ந்து அவளை தயங்கி தயங்கி “உள்ளாற வாங்க” கூப்பிட நானும் அந்த குரலின் இனிமையை ரசித்துக் கொண்டே உள்ளே சென்றேன்.

நான் நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து “உட்காருங்க, இதோ வந்துடுறேன்” சொல்லி பெட்ரூம்க்குள் சென்று வரும் போது நெற்றியில் ஒரே ஒரு ஸ்க்கர் பொட்டை மட்டும் வைத்துக் கொண்டே தலையில் சுற்றிய ஈரத்துண்டோடு வந்தாள்.

அந்த காலையில் குளித்த முகத்துடன் அவளின் அழகை பார்த்தும் என்னையும் அறியாமல் அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. இன்னொரு ஆணிற்கு சொந்தமானவள் என்றாலும் அவளை இது மாதிரி பார்த்தும் எனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது என் காதலி கோமதி.

ஆம் இப்போது என்னுடைய ஆத்மார்த்தமான காதலியாக தான் தெரிந்தாள். இருவருக்குமிடையே எந்த வித பேச்சும் நடைபெறவில்லை. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும் தான் நடந்துக் கொண்டிருந்தது.

கோமதி தான் அந்த மௌனத்தை கலைத்து, “என்ன குடிக்கிறீங்க?” கேட்டாள். ஆனால் இப்போது அவளிடம் எப்படி பேசுவது காதலியாக நினைத்து உரிமையில் ஒருமையாகவா இல்லை திருமணம் ஆன பெண்மணியிடம் பேசுவது போல் பேசுவதா என கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

நான் குழப்பத்தில் அமைதியாக இருப்பதை பார்த்து மீண்டும் அவளே “என்ன குடிக்கிறீங்க?” கேட்க தட்டுதடுமாறி வார்த்தைகளை மென்று விழுங்கி, “பரவாயில்ல இருக்கட்டும்” சொல்ல தலையை மட்டும் அசைத்து சரி என தெரிவித்தாள். இனியும் அமைதியாக இருந்தால் இருவருக்கும் ஒரு மாதிரி இருக்கும்.

அதை விட திடீரென்று யாராவது வந்து அமைதியாக இருப்பதை பார்த்தால் இன்னும் தர்ம சங்கடமாகிவிடும் என்பதால் நானே பேசலாம் என முடிவு செய்து,

“நீ.. நீங்க எப்படி இருக்கீங்க” இன்னும் தடுமாற்றதுடன் பேச உதட்டை விரித்து சிரித்தபடியே

“நா நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” கேட்க

“ம்ம். வாழ்நாட்களை கடத்திட்டு ஏதோ இருக்கேன்..” மனதில் இருப்பதை அப்படி சொன்னதும் சிரித்து அவளின் உதடுகள் ஒரு வினாடியில் மாறி கலையிழந்தது. அதை பார்த்தும்

“நாம தான் மனசில இருக்குறத தேவையில்லாம சொல்லி தொலைச்சிட்டோமோ” தோண்றியது.. அதை பற்றி ஏதாவது கேட்டால் வருத்தபடுவேனோ நினைத்து அவள் அதை பற்றி அடுத்து எதுவும் கேட்கவில்லை. மீண்டும் இருவருக்குமிடையே ஒரு அமைதி நிலவியது. இந்த முறை அவளே தான்

“குழந்தைங்க” சற்று தயக்கத்துடன் கேட்க எனக்குள் இவள் எதற்காக இந்த கேள்வியை கேட்கிறாள். அவளை போல் எனக்கும் திருமணமாகி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கேட்கிறாளா? இல்லை சாதாரணமாக தான் கேட்கிறாளா என நினைத்துக் கொண்டிருக்க மறுபடியும்

“குழந்தைங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க?” கேட்க

“ஒரு பொண்ணு தான். அமெரிக்காவுல வேல கெடச்சு அங்க செட்டில் ஆயிட்டா..”

“எனக்கு ரெண்டு பொண்ணுங்க.” என்றதும் என்னை அறியாமலே

“ம்ம் தெரியும்.. டுவின்ஸ். நந்தனா, நந்திதா..”

“ஆமா. இது எப்படி உங்களுக்கு” ஆச்சரியமாக கேட்டு விட்டு அவளே அதே ஆச்சரியத்துடன் மீண்டும்

“இந்த அபார்மெண்டுல எவ்வளவு மாசமா இருக்கீங்க?” வெகுளியாக கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது. லேசாக சிரித்தும் விட்டேன்.

“இல்ல இல்ல. நா இந்த அபார்மெண்டுக்கு வந்து ரெண்டு மூனு நாள் தான் ஆகுது.”

“பின்ன எப்படி என் பொண்ணுங்கள பத்தி” இழுத்துக் கொண்டே கேட்க

“நியூ இயர் செலிப்ரேஷன் அப்ப தான் உன்னையும் உன் பொண்ணுங்கள பாத்தேன். கோமதினு பேரு மட்டும் தான் அப்போதைக்கு தெரியும். உன் முகத்தை பாக்கல. நேத்து தான் பாத்தேன். சர்பைரைஸ்வும் இருந்துச்சு. அதே சமயம் சந்தோஷமாவும் இருந்துச்சு.” சொல்ல கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள் கோமதி.

“எனக்கு சந்தோஷமா தான் இருந்துச்சு. ஆனா இப்படியெல்லாம் கூட நடக்குமா? ஆச்சரியமாவும் இருந்துச்சு..”

“ம்ம் எனக்கு தான். கோமதின்ற பேசர்ன் தா பாக்கனும் நெனச்சேன். ஆனா அது நீயா இருப்பேன் நானும் நெனச்சு கூட பாத்ததில்ல.. எல்லாமே காலம் தான் தீர்மானிக்குது..”

“ம்ம்.. ஆமா.. காலம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது..”

“உங்களோட யார் இருக்காங்க?”

“யாரும் இல்ல. நா மட்டும் தான்.”சொன்னதும்..

“உங்க மனைவி” கொஞ்சம் தயக்கதுடன் கேட்க..

“அவ புன்னியவதி.. என் பொண்ணு சின்ன வயசா இருக்கும் போதே எந்த கஷ்டமும் படாம மேலே போய்டா” சொன்னதும்

“சாரி.. தேவையில்லாம கேட்டு சங்கடபடுத்திடேன்ல?” அவளின் வருத்தத்தை தெரிவிக்க

“அதலாம் இல்ல. அது நடந்து முடிஞ்சிருச்சு.. அத யாராலையும் மாத்த முடியாது..”

“ம்ம்.. சரி.. நீங்க ஏன் இங்க தனியா இருந்து கஷ்டபடனும்.? பேசாம உங்க பொண்ணு பக்கத்திலே வீடு பார்த்து இருக்கலாம்ல..”

“இருக்கலாம். என் பொண்ணு அத தான் சொன்னா. எனக்கு தான் அங்க போய் இருக்க புடிக்கல..”

“உங்க பொண்ணுக்கு இங்க எதுவும் வேலை கெடைக்கலயா?”

“அப்படியெல்லாம் இல்ல.. இங்க தான் பாத்துட்டு இருந்தா.. ஆன்சைட்காக அமெரிக்கா போன.. அப்படி அந்த கம்பெனியில வேலை பாக்குற தமிழ் பையன பாத்து பழகியிருக்கா? புடிச்சு போச்சு.”

“அப்ப கல்யாணம் ஆகிடுச்சா?” தயங்கி கொண்டே கேட்டாள்..

“ம்ம் ஆமா.. நா தான் அங்க போய் இருந்து பண்ணி வச்சிட்டு வந்தேன். என்னோட காதல் நிறைவேறாம போய்டுச்சு.. அட்லீஸ்ட் என்னோட காதலாவது அவ ஆசைபட்ட படி நிறைவேற்றட்டும் தான் அவளுக்கு பிடிச்ச பையனை எதையும் பாக்காம கல்யாண பண்ணி வச்சேன்” எதார்தமாக சொன்னாலும் அது கோமதியின் மனதில் முள் போல் குத்தியிருக்கும் போல் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

மீண்டும் அவளோடு வருவேன்…

384404cookie-checkமீண்டும் அவளோடு 5

1 comment

  1. Vera level story iam really appreciate u bro after long days iam reading lovely story. There is no words to say.

    Waiting for next part.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *